சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று “தவெக ஆட்சியமைக்க” ஆதரவு தரவேண்டும் என அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. எனினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தசூழலில் தான், சட்டப்பேரவைத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் ஆதரவளிக்கப்போவதாக நேற்று தெரிவித்ததையடுத்து, தவெக ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 113ஆக உயர்ந்திருக்கிறது.
ஆளுநர் விஜய் சந்திப்பு
தவெக பெரும்பான்மைக்கு இன்னும் 6 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம் அளித்திருந்தது. இதற்கிடையில், தவெக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரி வருகிறது. எனினும், பெரும்பான்மையை நிரூபித்த பிறகு, ஆட்சி அழைக்கப்படுவீர்கள் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இந்தசூழலில் தான், துரிதமாக மற்றக் கட்சிகளின் ஆதரவை பெறும் நோக்கில், தவெக செயல்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்ற தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் மு. வீரபாண்டியனைச் சந்தித்து ஆதரவு கோரினார். தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமயகத்திற்கு சென்ற அவர், அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ. சண்முகத்தை சந்தித்து ஆதரவை கோரியிருக்கிறார். இந்த இரு கட்சிகளும் ஆதரவு தரும் பட்சத்தில் தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 117-ஆக உயரும். இடதுசாரிகளின் முடிவிற்குப் பிறகே தாங்கள் முடிவெடுக்க உள்ளதாக விசிக தெரிவித்திருக்கும் நிலையில், அக்கட்சிகளின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நிர்மல் குமார்
முன்னதாக, சிபிஐ அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல்குமார், விசிக கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு உள்ளோம். ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள். என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆதரவு தரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தருவோம். அதேபோல, ஆளுநர் சட்டபடி முடிவெடுத்து ஆட்சி அமைக்க அழைப்பார் என நம்புகிறோம். அவரின் முடிவிற்கு பிறகு, அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
