தெலுங்கானாவின் பிரச்னைகளை மையமாக கொண்டு இயங்கும் வகையில் அரசியல் கட்சியைத் தொடங்கப்போவதாக கவிதா அறிவித்தார்.
தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான கேகவிதா, இன்று ‘தெலங்கானா ராஷ்டிர சேனா’ (TRS) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தெலங்கானா ராஷ்டிர சமிதி (TRS) என்ற பெயரில் இருந்த கட்சிதான், தேசிய அரசியலை நோக்கமாகக் கொண்டு பாரத் ராஷ்டிர சமிதி (BRS) எனப் பெயர் மாற்றப்பட்டது. இப்போது கவிதா அதே ‘TRS’கட்சியைத் தொடங்கியுள்ளார். இதன்மூலம் தெலங்கானாவின் அடையாளம் மீட்டெடுக்கப்படும் என அவர் நம்புகிறார்.
கட்சியிலிருந்து விலகிய கவிதா
தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சி, கடந்த பிஆர்எஸ் ஆட்சியின்போது நடந்த முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் அவ்வப்போது பேசிவருகிறது. அந்த வகையில், பி.ஆர்.எஸ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட காலேஸ்வரம் லிஃப்ட் பாசனத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆளும் காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கே.சந்திரசேகர் ராவின் மகளான கல்வகுந்த்லா கவிதா, பி.ஆர்.எஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தனது உறவினர்களுமான ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கிடையே கட்சி ஏற்கெனவே பல சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், கவிதாவின் தொடர் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கட்சி விரோத நடவடிக்கைளுக்காக கவிதாவை அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர் ராவ் இடைநீக்கம் செய்திருந்தார். இதையடுத்து, பி.ஆர்.எஸ். (பாரத ராஷ்டிர சமிதி) கட்சியிலிருந்தும் அவர் விலகினார். மேலும், தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். ஆயினும், ‘தெலுங்கானா ஜக்ருதி’ என்ற கலாசார அமைப்பை தொடங்கி, பொதுப் பிரச்னைகளில் கவனம் செலுத்திவருகிறார்.

கல்வகுந்த்லா கவிதா, கே.சந்திரசேகர் ராவ்
இதற்கிடையில் தெலுங்கானா ஜக்ருதியை அரசியல் கட்சியாக மாற்றுவது குறித்து, கவிதா ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில், தெலுங்கானாவின் பிரச்னைகளை மையமாக கொண்டு இயங்கும் வகையில் அரசியல் கட்சியைத் தொடங்கப்போவதாக கவிதா அறிவித்தார்.
தெலுங்கானா ராஷ்டிர சேனா (TRS) கட்சி துவக்கம்
அதன்படி, ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ’தெலுங்கானா ராஷ்டிர சேனா’ (TRS) என்ற பெயரில் புதிய கட்சியை கவிதா இன்று தொடங்கினார். முன்னர், தெலங்கானா ராஷ்டிர சமிதி (TRS) என்ற பெயரில் இருந்த கட்சிதான், தேசிய அரசியலை நோக்கமாகக் கொண்டு பாரத் ராஷ்டிர சமிதி (BRS) எனப் பெயர் மாற்றப்பட்டது. இப்போது கவிதா அதே ‘TRS’ என்ற அடையாளத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார். இது, தெலங்கானாவின் தியாக உணர்வு மற்றும் பிராந்திய அடையாளத்தை மீட்டெடுக்கும் என்று நம்பப்படுகிறது.
தந்தையைச் சாடிய கவிதா
புதுக் கட்சி தொடக்கம் குறித்து கவிதா, “இயக்கத்தின் அசல் நோக்கங்களுடன் மாநிலத்தை மீண்டும் சீரமைப்பதற்குமான தனது முயற்சியே தெலங்கானா ராஷ்டிர சேனா (டிஆர்எஸ்) அமைப்பின் தொடக்கம். பாரத் ராஷ்டிர சமிதி கட்சி தொழில்நுட்ப ரீதியாக இயங்கலாம், ஆனால் அது தனது ஆன்மாவையும் சூழலையும் இழந்துவிட்டது. அது தெலங்கானாவின் சாராம்சத்தை இழந்துவிட்டது. இந்த வெற்றிடம்தான் தெலங்கானா ராஷ்டிர சேனா (டிஆர்எஸ்) தொடங்கப்படத் தூண்டியது. கேசிஆர், இனி நமது மனிதர் அல்ல… மாறாக, அவர் இயந்திரம்போல ஆகிவிட்டார். தன்னைச் சுற்றியுள்ள நரிகளால் அவர் இப்போது ஆட்கொள்ளப்பட்டுள்ளார். தெலங்கானா ராஷ்டிர சேனா (டிஆர்எஸ்) மூன்று பிரதான கட்சிகளையும் (பாஜக, காங்கிரஸ், பிஆர்எஸ்) ஐந்து முக்கியப் பிரச்சினைகளில் எதிர்த்துப் போராடும். ஆட்சிக்கு வந்தால் அவற்றைச் செயல்படுத்தும்” என்றார்.
