எதிர்க்கட்சிகள் பிளவுபட்டால் ஆட்சிப் போட்டி எப்படி மாறும்? 1971, 1989 தமிழகத் தேர்தல்கள் காட்டும் அரசியல் பாடங்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்..
Summary
எதிர்க்கட்சிகள் பிளவுபட்டால் வாக்கு சிதறி ஆளும் மாற்றம் எவ்வாறு உருவாகிறது என்பதை 1971, 1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் காட்டுகின்றன. காங்கிரஸ், அதிமுக இரண்டாக உடைந்த சூழலில், திமுக கூட்டணிகள் பெரும் பலன் அடைந்தன. 1989இல் ஜானகி, ஜெயலலிதா அணிகள் பிரிந்து போட்டியிட, திமுக 150 இடங்களை வென்று ஆட்சியமைத்தது.
1971 தேர்தலில் என்ன நடந்தது..?
1971 சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி இந்திரா மற்றும் காமராஜர் தலைமையில் இரண்டாக உடைந்திருந்தது. இந்திரா காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி அமைத்தது. காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ், ராஜாஜியின் சுதந்திரா கட்சி உள்ளிட்டவை இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. முந்தைய இரு தேர்தல்களிலும் காங்கிரஸை ஆதரித்து பரப்புரை செய்த தந்தை பெரியார், திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

karunanidhi
இத்தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றி பெற்றது. 72.10 சதவீத வாக்குகள் பதிவாகின. 203 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 184 இடங்களை கைப்பற்றியதுடன், 48.58 சதவீத வாக்குகளை பெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் ஒரு தேர்தலில் ஒரு கட்சி இவ்வளவு அதிக இடங்களையும், அதிக வாக்கு சதவீதத்தையும் பெற்றது இதுவே முதல்முறை.
1989 தேர்தலில் என்ன நடந்தது..?
இதேபோல், மற்றொரு உதாரணமாக 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சொல்லலாம்.1987இல் எம்ஜிஆர் காலமான பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது.

jayalalithaa, mgr and janaki
அதிமுக எம்ஜிஆரின் மனைவி ஜானகி முதல்வரான நிலையில், சில வாரங்களிலேயே சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும் அமளி ஏற்பட்டது. சட்டம் ஒழுங்கு, அரசியல் ஸ்திரத்தன்மையை காரணம் காட்டி ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. ஒராண்டுக்கு பின் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுக தலைமையிலான அணியில் மார்க்சிஸ்ட், ஜனதா தளம் கட்சிகள் இடம்பெற்றன. அதிமுகவின் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும் ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும் போட்டியிட்டன. சிவாஜி கணேசன் தலைமையிலான தமிழக முன்னேற்ற முன்னணி ஜானகி அணியையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதா தலைமையிலான அணியையும் ஆதரித்தன. காங்கிரஸ், ஐக்கிய பொதுவுடமை கட்சி, இந்திய முஸ்லீம் லீக் ஆகியவை மூன்றாவது அணியாக களம் கண்டன.

karunanidhi
சில பிரச்சினைகள் காரணமாக மருங்காபுரி, மதுரை கிழக்கு தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. 69.69 சதவீத வாக்குகள் பதிவாகின. 202 இடங்களில் போட்டியிட்ட திமுக 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 33.20 சதவீத வாக்குகளை பெற்றது திமுக.
ஜெயலலிதா அணி 27 இடங்களிலும், காங்கிரஸ் 26 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஜானகி அணி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வென்றது. சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி போட்டியிட்ட 49 இடங்களிலும் தோல்வியடைந்தது.
