ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்க விமானத்தில் இருந்த 2ஆவது நபர் மீட்கப்பட்டது குறித்து சுவாரசியமான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 3 அன்று அமெரிக்காவுக்குச் சொந்தமான F-15E என்ற விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்திருந்தது. இதிலிருந்து விமானி தப்பிச் சென்றதாகவும் அது கூறியிருந்தது. இதுதொடர்பான வீடியோவையும் ஈரான் வெளியிட்டிருந்தது. இதையடுத்து, அவரை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக்கப்பட்டன. அவரை உயிருடன் பிடிப்பவருக்கு 60,000 டாலர் வெகுமதி வழங்குவதாக ஈரான் அறிவித்திருந்தது.

இதற்கிடையே, விமானம் வீழ்ந்தவுடன் பாதுகாப்பாக வெளியேறிய அந்த 2ஆவது விமானி கரடுமுரடான ஜாக்ரோஸ் மலைப்பகுதிகளில் பாறை பிளவுப் பகுதியில் ஒளிந்துகொண்டிருந்தார். அவரைத் தேடும் பணியில் ஈரான் புரட்சிப்படையும் உள்ளூர் பழங்குடிகளும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் எங்கோ வெகுதொலைவில் இருந்த அமெரிக்க குழு அந்த நேரத்தில் சாதுர்யமாக அவரை மீட்டது உலகெங்கும் பேசுபொருளாகியுள்ளது. அந்த வீரர் உடையில் அணிந்திருந்த பிரத்யேக மின்னணுச் சாதனம் வெளியிட்ட ரகசிய சிக்னல் மூலம்தான் அவர் இருந்த இடத்தை அமெரிக்க குழு அடையாளம் கண்டு கச்சிதமாக மீட்டதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சாதனம் வெளியிடும் சிக்னலை அமெரிக்காவின் பிரத்யேக குழு தவிர வேறு யாரும் இடைமறித்து அறிய முடியாது என்பதும் அதன் சிறப்பம்சமாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீரர் மீட்கப்பட்டு விட்டதாக ஈரானுக்கு தவறான தகவலை கொடுத்து, மேலும் 2011இல் பாகிஸ்தானில் புகுந்து, ஒசாமா பின்லேடனை கொன்ற அதே சீல்சிக்ஸ் குழுதான் இந்த மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இக்குழுவினர் விமானி இருந்த இடத்தில் ஹெலிகாப்டரை கச்சிதமாக தாழப் பறக்கச் செய்து அவரை தூக்கிக்கொண்டு ஈரான் நிலப்பகுதியைவிட்டு அகன்றுள்ளனர். எதிரியின் நிலப்பகுதிக்குள் சென்று அங்கு தவித்தவரை பெரும் ஆபத்துக்கிடையில் மீட்டு வந்தது அமெரிக்க போர் வரலாற்றில் மிகப்பெரிய சாகசச் செயல்களில் ஒன்று என கருதப்படுகிறது.

டொனால்டு ட்ரம்ப்
விமானியை வெற்றிகரமாக மீட்டது குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப், ”அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ஒருவேளை, அந்த விமானியை அமெரிக்கா மீட்டிருக்காவிட்டால், அது ஈரானுக்கு வெற்றியாக இருந்திருக்கும். அவரைப் பணயக்கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு பல்வேறு கோரிக்கைகளை ஈரான் அமெரிக்காவிடம் வலியுறுத்தி இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
