தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக திருச்சி சென்ற அரசுப் பேருந்தின் எல்இடி திரையில் ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற எழுத்துகள் மாற்றி காட்டப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசுப் பேருந்துகளில் முன்பக்கமும், பின்பக்கமும் எல்இடி திரைகளில் பேருந்து சென்றடையும் வழித்தடங்கள் சுழலும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் பொதுமக்கள் அந்த எல்இடி திரைகளை கண்டு, தாங்கள் செல்லும் ஊர்களுக்கான பேருந்துகளில் சுலபமாக ஏறிச் செல்லும் நடைமுறையை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கம்பத்திலிருந்து தேனி, திண்டுக்கல் மார்க்கமாக திருச்சி செல்லும் TN 47 N 4857 என்ற எண் கொண்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தின் பின்பக்கம் உள்ள எல்இடி திரையில், ஊர் பெயருக்கு பதில், ’தமிழக வெற்றி கழகம்’ என்று மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

அரசுப் பேருந்து
அந்த வீடியோவின் பின்னணியில், நடிகை விஜயின் கட்சி பாடலான, “உங்கள் விஜய் உங்கள் விஜய் உயிரென வர்றனா” என்று பாடல் ஒலிக்கப்பட்டிருந்தது. கூடவே, அந்த வீடியோவில், “2026 டிவிகேதான் நோட் பண்ணுங்க ப்ரோ” என்ற வாசகமும் சிவப்பு எழுத்துகளில் இடம்பெற்று இருந்தது. அந்த வீடியோவை, சென்னையைச் சேர்ந்த, பிரசாந்த் ரங்கசாமி என்பவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு, “யார்ரா அவன் பஸ் போர்டை ஹேக் பண்ணது” என்ற கேள்வியும் எழுப்பி இருந்தார்.
இதுகுறித்து பிரசாந்த் ரங்கசாமியை தொடர்பு கொண்டபோது, தமிழக வெற்றி கழக விஜய் ரசிகர்களின் குழு ஒன்றிலிருந்து இந்த வீடியோ கிடைத்ததாகவும், சுவாரஸ்யமாக இருந்ததால், தான் அதை தனது வலைதளத்தில் பதிவிட்டதாகவும் தெரிவித்தார். பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, ’தமிழக வெற்றி கழகம்’ பெயருடன் உலா வந்த அந்தப் பேருந்து, கும்பகோணம் மண்டலத்திற்கு உட்பட்டது என்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளரை தொடர்புகொண்டபோது, ” ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயர் வரும்படி ஹேக் செய்ய முடியாது. சின்ன பசங்களில் யாரோ பேருந்தில் ஏறி பின்னாடி கீழ அமர்ந்தவாறு தாங்கள் கொண்டுவந்த எல்இடி மெமரியை பேருந்தில் பொருத்தி உள்ளது கண்டறியப்பட்டது. பேருந்து பணிமனைக்கு வந்ததும் அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து கிளம்பும் இடம் மற்றும் பேருந்தில் ஏறி எல்இடியை மாற்றம் செய்தவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கு பேருந்து நடத்துனர் முழுப் பொறுப்பு ஏற்க முடியாது என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.
