2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ள நிலையில், இந்த நடைமுறையால் அரசுக்கு என்ன பாதிப்பு, இதனை தேர்தல் ஆணையம் ஏன் எதிர்க்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
Summary
தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட அறிவித்திருப்பது கட்சியினருக்கு உற்சாகம் அளித்தாலும், இரண்டிலும் வென்றால் சட்ட ரீதியான சிக்கல்கள் எழும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் படி ஒருவர் அதிகபட்சம் இரண்டு இடங்களில் மட்டுமே நிற்கலாம்; ஆனால் இரண்டிலும் வென்றால் 14 நாளுக்குள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும்.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் நிற்பதாக அறிவித்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சில முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இரண்டு தொகுதியில் நிற்பது என்பது சாதாரண நிகழ்வாகவே உள்ளது என்றாலும், ஒருவர் இரண்டு தொகுதியில் வெற்றிபெற்றால் அதனால் பல்வேறு சிக்கல்களும் ஏற்படுகிறது.

தவெக
ஆரம்பத்தில் ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலையே இருந்தது. ஆனால் 1996-ம் ஆண்டுக்கு பின்னர் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு ஒருவர் அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்று மாற்றப்பட்டது.
அதே நேரம் ஒருவர் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 14 நாட்களுக்குள், அவர் எதாவது ஒரு தொகுதியில் தொகுதியின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பின்னர் தேர்தல் ஆணையம் அந்த தொகுதியை காலியானதாக அறிவித்து அதற்கு இடைத்தேர்தலை நடத்தும்.

விஜய்
பொதுவாக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் அரசுக்குத் தோராயமாக 5 கோடி முதல் 10 கோடி வரை செலவாகும். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு படி வழங்குவதில் இருந்து மத்திய மற்றும் மாநில காவல் படையினரைத் தொகுதி முழுவதும் நிலைநிறுத்துவதற்கான செலவுகளும் ஏற்படும். மேலும் இதனால் பள்ளிகள், அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும்.
இதன் காரணமாக இந்த நடைமுறைக்கு தேர்தல் ஆணையம் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இது போன்ற சூழலை தவிர்க்க ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் நின்று, ஒன்றை ராஜினாமா செய்வதால் ஏற்படும் இடைத்தேர்தல் செலவை அந்த வேட்பாளரே ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
