2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 10 ஏகே 47 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
அந்தவகையில் சென்னை அசோக் நகர், இரண்டாவது அவென்யூ முதல் தெரு ஜங்ஷனில், தி.நகர் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மகேந்திரா வேன் ஒன்றை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பத்து ஏகே 47 துப்பாக்கிகள் இருந்ததை கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்து, இது குறித்து வேன் ஓட்டுநர் மகேந்திரன் என்பவரிடம் விசாரித்துள்ளனர்.
படத்திற்கான டம்மி துப்பாக்கிகள்..
விசாரணையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் DC திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக 10 ஏகே 47 டம்மி துப்பாக்கிகளை வடபழனியில் இருந்து சினிமா ஷூட்டிங்கிற்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் பயன்படுத்திவிட்டு அந்த துப்பாக்கிகளை மீண்டும் வடபழனிக்கு கொண்டு சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

டம்மி ஏகே 47 துப்பாக்கிகள்
மேலும், டம்மி துப்பாக்கிகளுக்கான லைசன்ஸையும் காண்பித்ததால் தேர்தல் பறக்கும் படையினர் சரி பார்த்து அனுப்பி வைத்தனர்.
300 துப்பாக்கிகள் ஒப்படைக்கப் படவில்லை..
தமிழக சட்டமன்ற தேர்தலை ம் முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஓப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்காக சென்னை காவல்துறைக்குட்பட்டு 24 தொகுதிகள் உள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிந்திருந்த நிலையில், மொத்தமாக 2,375 உரிமம்பெற்ற துப்பாக்கிகளில் இதுவரை 1490 உரிமம்பெற்ற துப்பாக்கிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 300 துப்பாக்கிகள் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விளையாட்டிற்காகவும், வங்கி பாதுகாப்பிற்காகவும் வைத்துள்ள 527 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
